பிறந்த நாளில் கட்சியினரை தவிர்த்த விஜய் வாழ்த்தியவர்களுக்கு வலைதளத்தில் நன்றி

சென்னை : பிறந்த நாள் கொண்டாட்டத்தையும், பிறந்த நாளில் கட்சியினரை சந்திப்பதையும் தவிர்த்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தன்னை வாழ்த்தியவர்களுக்கு சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
த.வெ.க., தலைவர் விஜய்க்கு நேற்று முன்தினம் 51வது பிறந்த நாள். இதையொட்டி, அவரது பிறந்த நாளை த.வெ.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மாநிலம் முழுதும் கொண்டாடினர். அவரை சந்திக்க கட்சி தொண்டர்கள், பனையூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு, அதிகாலை முதல் மாலை வரை தவம் கிடந்தனர்.
ஆனால், அவர் வெளியே வரவே இல்லை. ஜெயலலிதா பாணியில், பால்கனியில் நின்றாவது கையசைப்பார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் அடையாறில் உள்ள தன் மற்றொரு வீட்டிற்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியானது.
இதனால், தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பிறந்த நாள் கொண்டாடிய கட்சியினருக்கு, போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். உளுந்துார்பேட்டையில், விஜய் பிறந்த நாளுக்கு ஏற்பாடு செய்த கட்சி நிர்வாகிகள் மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினர். அதற்கு விஜய் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை.
அதேநேரம், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களுக்கு, சமூக வலைதள பக்கத்தில் விஜய் நேற்று நன்றி தெரிவித்தார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத்துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடியிருக்கும், என் அன்பான தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள், உலகம் முழுதும் இருந்துவரும், உங்களின் அன்பு மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு, என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவு, மக்களுக்கு சேவை செய்வதற்கான, என் பயணத்தை ஊக்குவிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுத்து செல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக விஜய் ரசிகராக இருந்து, த.வெ.க.,வில் இணைந்தேன். வெகுகாலமாக அவரை நேரில் சந்திக்க வேண்டும் என முயற்சிக்கிறேன். இந்த முறை பிறந்த நாளில், எப்படியும் கட்சியினரை அவர் சந்திப்பார் என்று லோக்கல் நிர்வாகிகள் சொன்னார்கள். அதை நம்பி, கட்சி அலுவலகம் இருக்கும் பனையூருக்குச் சென்று விஜயை பார்க்க, நாள் முழுதும் காத்திருந்தேன். ஆனால், அவர் கடைசி வரை, பனையூர் பக்கமே வரவில்லை. மிகுந்த ஏமாற்றத்தோடு, ஊர் திரும்பினேன். கட்சியின் தலைவராக இருப்பவரை கட்சித் தொண்டர்களே பார்க்க முடியாத நிலை இருக்கும்போது, அவரால், மக்களுக்காக எப்படி பணியாற்ற முடியும் என தெரியவில்லை?முருகேசன், த.வெ.க., தொண்டர், மன்னார்குடி வராதது வேதனை!நடிகர் விஜயால் தான் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழும் என நம்பும் லட்சோப லட்சம் மக்களில் நானும் ஒருவன். சினிமாவில் அவர் பேசும் வசனம், நடிப்பு பார்த்து அவர் மீது ஈர்ப்பு கொண்டேன். அவர், அரசியல் மாற்றத்துக்காக, த.வெ.க.,வை துவங்கியதும், அதில் நானும் என்னை இணைத்துக் கொண்டேன். முடிந்த அளவு கட்சிப் பணிகளையும், மக்கள்நல பணிகளையும் செய்து வருகிறேன். அவர், எங்கள் ஊர் பக்கம் நிகழ்ச்சிகளுக்கு வந்ததில்லை. அதனால், இந்த பிறந்த நாளிலாவது அவரை சந்திக்கலாம் என்பதற்காக ஊரில் இருந்து வந்தேன். என்னைப் போல் வந்தவர்கள் பலரும் சேர்ந்து, நடிகர் விஜய் தரிசனத்துக்காக பனையூரில் காத்திருந்தோம். கடைசி வரை அவர் வராதது வேதனை.செல்வகுமார், த.வெ.க., தொண்டர், தர்மபுரி
மேலும்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி மனு