போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கும்பல் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி வ.உ.சி மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு மேலப்பாளையத்தை சேர்ந்தவரும் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீசாக பணிபுரிபவருமான முகமது ரஹ்மத்துல்லாஹ் 29, தமது மனைவி, ஆறு மாத குழந்தையுடன் பூங்காவிற்கு வந்திருந்தார்.

ரவுடிகள் சிலர் சேர்ந்து ஒருவரை தாக்கினர். சாதாரண உடையில் இருந்த ரஹ்மத்துல்லாஹ் கண்டித்தார். அந்த கும்பலில் ஒருவன் ரஹ்மத்துல்லாஹ்வின் வலது கையில் அரிவாளால் வெட்டினான். அவர் பலத்த காயமுற்றார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையில் போலீசார் இரவோடு இரவாக ஹரீஷ் என்ற ஹரிசுப்பிரமணியன் 21, மதன் என்ற மாணிக்க செல்வம் 20, பார்த்திபன் 20, தினேஷ் 21 மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஹரீஷ் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன.

Advertisement