டூவீலர் -- கார் மோதியதில் மாணவர், முதியவர் பலி

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டூவீலர் கார் நேருக்கு நேர் மோதியதில் டூவீலரை ஓட்டிச்சென்ற பள்ளி மாணவர் பாண்டி பிரகாஷ் 17, தொழிலாளி கருப்பன் 70, பலியாயினர்.

ஆண்டிபட்டி அருகே பிள்ளைமுகம்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி மகன் பாண்டி பிரகாஷ். இவர் டி.பொம்மிநாயக்கன்பட்டி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாண்டிபிரகாஷ், பிள்ளைமுகம்பட்டியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி கருப்பனுடன் 70, டூவீலரில் டிபன் வாங்க திம்மரசநாயக்கனூர் சென்று விட்டு மதுரை - - தேனி ரோட்டில் திரும்பினார்.

அப்போது ஆண்டிபட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் திம்மரசநாயக்கனூர் விலக்கு அருகே டூவிலர் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டி பிரகாஷ், கருப்பன் இருவரும் ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு இருவரும் இறந்தனர். மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த கார் டிரைவர் சின்னாண்டியிடம் 52, ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement