தொழிலாளி அடித்து கொலை உறவினர்கள் போராட்டம்

குலசேகரன்பட்டினம்: அடித்துக் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துாத்துக்குடி மாவட்டம், தேரியூர் ஆண்டிவிளையைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம், 39; கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 35, என்பவரை குடி போதையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் சுயம்புலிங்கம் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அங்கு சென்ற ஆறுமுகம், அவரது தம்பிகள் முருகன், 32, ராமர், 30, நண்பர் மணி, 34, ஆகியோர் சுயம்புலிங்கத்தை இரும்பு கம்பி மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர்.

அவர் மயக்கமடைந்த பின், அவர்கள் தப்பினர். துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுயம்புலிங்கம் நேற்று உயிரிழந்தார். குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

'கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்' எனக்கூறி, அவரது உறவினர்கள் தர்ணா செய்தனர். திருச்செந்துார் டி.எஸ்.பி., மகேஷ்குமார் சமரசம் பேசினார்.

Advertisement