சேலம் - அரக்கோணம் பயணியர் அவதி அடிக்கடி ரத்தாகிறது 'ராசியில்லாத ரயில்'

சேலம்: நாட்டின் எந்த பகுதியில் திருவிழா நடந்தாலும், சிறப்பு ரயிலாக ஓட சென்றுவிடுவதால், சேலம் - அரக்கோணம் இடையேயான பயணியர் ரயில் அடிக்கடி காலவரையின்றி ரத்து செய்யப்படுவது தொடர்கதையாகி விட்டது. நடப்பாண்டில் மூன்றாவது முறையாக இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து, வாரத்தின் ஐந்து நாட்கள் காலை 5:15 மணிக்கு புறப்பட்டு, 10:50 மணிக்கு சேலம் வந்து சேரும் வகையிலும், சேலத்திலிருந்து மதியம் 3:30 மணிக்கு கிளம்பி இரவு 8:45 மணிக்கு அரக்கோணம் செல்லும் வகையிலும் பயணியர் ரயில் இயக்கப்படுகிறது.

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில் போக்குவரத்து உள்ளதால், இந்த பயணியர் ரயில் மிகச்சிறந்த ஒரு இணைப்பு ரயில் சேவையாக உள்ளது.

ஆனால், இந்த ரயில் அடிக்கடி காலவரையின்றி ரத்து செய்யப்படுகிறது. நடப்பாண்டில் மூன்றாவது முறையாக, சேலம் - அரக்கோணம் பயணியர் ரயில் தேதி குறிப்பிடாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணியர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ரயில் பயணியர் கூறியதாவது:

இந்த ஆண்டு ஜன., 20ம் தேதி நிறுத்தப்பட்ட சேலம் - அரக்கோணம் பயணியர் ரயில், ஏப்., 4ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

அடுத்து, மே 8ம் தேதி நிறுத்தப்பட்டு, அதே மாதம் 20ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக அடுத்த அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கேட்டபோது, பூரி ஜெகநாதர் கோவில் திருவிழாவுக்காக, நாடு முழுதும் பல ரயில்கள் சிறப்பு ரயில்களாக மாற்றி விடப்பட்டுள்ளன. அதன்படி, சேலம் கோட்டத்திலிருந்து சேலம் - அரக்கோணம் ரயில் அங்கு மாற்றிவிடப்பட்டுஉள்ளது என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement