கூமாபட்டியில் வெறிநாய் கடித்து குதறி 25 பேர் காயம்

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகா, கூமாபட்டியில் நேற்று முன்தினம் மாலை முதல், வெறிநாய் ஒன்று ராமசாமியாபுரம், பஸ் ஸ்டாண்ட், தைக்கா பஜார், மேலத்தெரு, யாதவர் தெரு உட்பட பல்வேறு தெருக்களில் நடந்து சென்ற மக்களை கடித்துக் குதறியது.

இதில், 16 ஆண்கள், மூன்று பெண்கள் உட்பட 19 பேர் காயமுற்று வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை மீண்டும் பல்வேறு தெருக்களில் திரிந்த அந்த நாய், நான்கு ஆண்கள், இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேரை கடித்துக் குதறியது.

அவர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கூமாபட்டி சிக்கந்தர் பாஷா, 65, பாலையா, 60, உதயகுமார், மாரியம்மாள், 65, காளீஸ்வரி, 46, மார்த்தாண்டன், சாமிவேல், 80 ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடு திரும்பினர். பேரூராட்சி ஊழியர்கள் நாயை பிடிக்க முயன்றனர். நாய் பிடிபடாததால் ஊழியர்கள் திணறினர்.

Advertisement