எங்களுக்கு டாஸ்மாக் வேண்டும் பெண்கள் தர்ணாவால் வியப்பு

திருப்பூர்: திருப்பூரில், தங்கள் பகுதியில் மதுக்கடை தொடர்ந்து செயல்பட வேண்டும் என, பெண்கள் மனு அளித்தது வியப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் - கொங்கு மெயின் ரோட்டில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே ரங்கநாதபுரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.

நோயாளிகளுக்கும், அருகாமை குடியிருப்பு மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதால், மதுக்கடையை அகற்ற இ.கம்யூ.,வினர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.

அதேநேரம், மதுக்கடை அமைந்துள்ள அப்பகுதியை சேர்ந்த பெண்கள், 20 பேர், மதுக்கடை தொடர்ந்து செயல்பட வேண்டும் எனக்கோரி மனு அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

30 ஆண்டுகளாக செயல்படும் மதுக்கடையால், மக்களாகிய எங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.

பாரில் பணிபுரிவோர், எங்கள் பகுதிக்குள் புதிய, சந்தேக நபர்கள் நுழைந்தால் கேள்வி கேட்கின்றனர். எங்களுக்கு மதுக்கடை பாதுகாப்பு அளிக்கிறது.

சொந்த காரணங்களுக்காக, வெளிநபர்களை பணம் கொடுத்து அழைத்துவந்து, மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். எங்கள் கணவர்களும், பத்திரமாக வீட்டுக்கு வந்து விடுகின்றனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

குறைகேட்பு கூட்ட அரங்க போர்டிகோவில், திடீரென தரையில் அமர்ந்து பெண்கள் தர்ணாவிலும் ஈடுபட்டனர். 'சிலரது துாண்டுதலில் மதுக்கடைக்கு ஆதரவாக பெண்கள் மனு அளித்துள்ளனர்; இது தவறான போக்கு' என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisement