துப்பாக்கி ஏந்திய போலீசுடன் கலெக்டர் ஆபீசில் பெண் மனு

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி, 39. இவர், 2023 ஆக., 3ல் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கின் முக்கிய சாட்சியான மாயாண்டியின் மனைவி செல்விக்கு, சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, அவர் நீதிமன்றத்தில் தெரிவித்த தகவலில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, இரு போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்வி நேற்று வந்தார்.

அவர் அளித்த மனுவில், 'மூன்று மகன்கள் உள்ளனர். கணவர் மாயாண்டி கொலை செய்யப்பட்டதால், குழந்தைகளை பராமரிக்க வழியில்லாமல் வாழ்வதா, சாவதா என்ற மனநிலையில் தவித்து வருகிறேன். ஆதரவற்ற விதவையான எனக்கு ஏதாவது அரசு வேலை வழங்க வேண்டும்' என கூறியுள்ளார்.

பொதுவாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் நபர்களுக்கு, அதற்கான செலவை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது விதிமுறை.

ஆனால், வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் கணவரை இழந்து தவித்து வரும் செல்விக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான செலவுகளை காவல் துறையினரே செய்து வருவதாக அவர் கூறினார்.

Advertisement