பாட்டி சாவில் திடீர் திருப்பம் கொன்ற காமுக பேரன் கைது

1

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே பணம் தராத பாட்டியை, பலாத்காரம் செய்து கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், சின்னப்பிள்ளையூரைச் சேர்ந்தவர் சின்னப்பிள்ளை, 74; விவசாய கூலி. இரு மகன்கள், மகள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர்.

கணவர் பெருமாள், 20 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். மகன் ராமகவுண்டர், வீட்டருகில் தனியாக வசித்தார். சின்னப்பிள்ளை, 20ம் தேதி மாலை வீட்டில் பேச்சு, மூச்சின்றி கட்டிலில் கிடந்தார்.

ராமகவுண்டர் மகன் லட்சுமணன், தந்தைக்கு தகவல் அளித்து மருத்துவரை அழைத்து வந்து பார்த்தபோது, அவர் இறந்தது தெரிந்தது. மர்மமான முறையில் தாய் இறந்ததாக, ராமகவுண்டர் புகாரில் தாரமங்கலம் போலீசார் விசாரித்தனர்.

கழுத்தில் காயம் இருந்ததால் உடற்கூறு பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிந்து, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையை தீவிரமாக்கியதில், மகள்வழி பேரனான பிரகாஷை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

சின்னப்பிள்ளையின் மகள்வழி பேரன் பிரகாஷ், 31, மூட்டை துாக்கும் தொழிலாளி. இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடால் மனைவி சில நாட்களுக்கு முன், தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். குடிப்பழக்கம் உள்ள பிரகாஷ், பாட்டியிடம் அவ்வப்போது பணம் வாங்கி சென்றுள்ளார்.

கடந்த 20ல், பாட்டியிடம் 2,000 ரூபாய் கேட்டபோது தரமறுத்து திட்டியுள்ளார். போதையில் இருந்த பிரகாஷ், ஆத்திரத்தில் அடித்ததில் சின்ன்ப் பிள்ளை மயங்கி விழுந்துள்ளார். அதன் பிறகும் விடாமல், அவரை பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.

பின், வீட்டில் இருந்த 5,000 ரூபாயை எடுத்துக்கொண்டு திருச்செந்துார் சென்றுள்ளார். அங்கு மொட்டையடித்து திரிந்த நிலையில், மனைவி ஊரான பெரியேரிப்பட்டிக்கு நேற்று வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement