மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை எம்.எல்.ஏ., முற்றுகையிட்டு போராட்டம்

புதுச்சேரி : லஞ்ச புகார் தொடர்பாக பதிவாளரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொது நல அமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி பத்திரப்பதிவுத் துறையில் முறைகேடு நடப்பதாகவும், பதிவுத்துறை ஒத்துழைப்புடன் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் புகார் தெரிவித்து வந்தன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சாரம், சார்பதிவாளர் ஸ்ரீகாந்த் கழிவறையில், பத்திரத்தை பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு தலைமையில் பொது நல அமைப்பினர், நேற்று சாரத்தில் உள்ள மாவட்ட பத்திரப் பதிவாளர் அலுவலகத்திற்குள் புகுந்து, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின், மாவட்ட பதிவாளர் அறையை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, லஞ்ச புகார் தொடர்பாக பதிவாளர் தயாளனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார், போரட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.,விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

அதனைத் தொடர்ந்து, கலெக்டர் குலோத்துங்கன், நேரு எம்.எல்.ஏ.,வை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement