அகோபிலமடம் ஜீயர் திருநட்சத்திர விழா ஸ்ரீரங்கத்தில் கோலாகலம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரத்தை கட்டுவித்த அகோபிலமட பரம்பரையில், 46வது பட்டம், ஸ்ரீலட்சுமி நரசிம்ம திவ்யபாதுகாசேவக ஸ்ரீவண்சடகோப ஸ்ரீரங்கநாத யதீர்ந்திர மகாதேசிகன் ஜீயர் சுவாமிகளின் 70வது திருநட்சத்திர பூர்த்தி விழா, வரும் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, திருநட்சத்திர பூர்த்தி விழா, ஸ்ரீரங்கம் தசாவதார சன்னிதி அகோபிலமடத்தில் 20ம் தேதி துவங்கி விமரிசையாக நடந்து வருகிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு தினமும் மாலை, நாட்டிய, நாடகங்கள் நடந்து வருகின்றன.

இன்று நரசிம்மர் ஆன்மிக நாடகம், 25 முதல் 28 வரை வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள், 29ல் நாம ஸங்கீர்த்தன வைபவம் நடைபெற உள்ளன. இன்று, ஜீயர் சுவாமிகள், 71 மஹா வித்வான்களை சன்மானம் வழங்கி கவுரவப்படுத்துகிறார்.

மகோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக வேத பாராயணம் 25ல் துவங்கி 29 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளன. இதில், ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்கள் மற்றும் அவற்றின் அனைத்து உட்பிரிவுகளையும் பாராயணம் செய்ய உள்ளனர்.

இதில், நாடு முழுதும் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் பங்கேற்கின்றனர். 29ம் தேதி மாலை, ஸ்ரீரங்கம் திருவீதிகளில் ஜீயர் சுவாமிகளின் பட்டினப்பிரவேசம் நடைபெற உள்ளது. 30ம் தேதி ஜீயர் சுவாமிகள் திருநட்சத்திர பூர்த்தி மகோத்வசம் நடைபெற உள்ளது. ஜீயரின் திருநட்சத்திர மகோத்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

Advertisement