மதுரை மாநாடு கந்த சஷ்டி கவச பாடல் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்தது

மதுரை : மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் குன்றம் காக்க கோயிலை காக்க என்ற தலைப்பில் நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில், 5 லட்சம் பக்தர்கள் மனமுருகி பாடிய கந்த சஷ்டி கவசத்தை மொத்தமாக சோஷியல் மீடியாக்களில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பம் (லைக்குகள்), ஒரு கோடிக்கு மேலான பார்வையை (வியூவ்ஸ்) கடந்துள்ளது. மாநாட்டின் இந்த தாக்கம் தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் ரீதியாக எதிர்பார்க்கப்பட்ட மதுரை முருக பக்தர்கள் மாநாடு பல்வேறு சவால்களுக்கு இடையே பிரமாண்டமாக நடந்தது. இம்மாநாட்டில் அரசியல் பேசக் கூடாது என்ற நீதிமன்றம் நிபந்தனையுடன் நடந்தாலும், கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட சில அரசியல் கட்சிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையிலான வெற்றி பெற்றதாகவே ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சிகள் உற்சாகம் தெரிவித்துள்ளன.

இம்மாநாட்டிற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., பின்னணியாக இருந்தாலும், முருகன் மீது பற்றுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் தன்னெழுச்சியாக கூடியது ஆளுங்கட்சியை உலுக்கியுள்ளது. அதையும் தாண்டி மாநாட்டில் பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சு, ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் புதிய பாலமாக அமைந்தது.

குறிப்பாக 'ஹிந்து மதத்தை விமர்சிக்கும் தமிழக கட்சிகள், அரேபியாவில் இருந்து வந்த மதம் குறித்து கேள்வி கேட்க முடியுமா. அதற்கான துணிச்சல் உண்டா. எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்றது ஹிந்துக்களை யோசிக்க வைத்துள்ளது. முருகனை ஒப்பிட்டு முருக பக்தரான பசும்பொன்முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேசியது, தென் மாவட்டங்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூக ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாக தி.மு.க., கூட்டணிக்கு எதிராக திசை திருப்பும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

அதுபோல் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின், ஹிந்துக்கள் மதிக்கும் திருநீறு வேண்டாம்; ஆனால் ஹிந்து ஓட்டு வேண்டுமா. திருநீறை அழித்தவர் ஓட்டு பிச்சை கேட்க வரும்போது தக்க பதில் அளியுங்கள் என்பதும் ஹிந்துக்களை சிந்திக்க வைத்துள்ளது.

ஆன்மிகத்தை எழுச்சியுறச் செய்யும் தலைவர்களின் இதுபோன்ற பேச்சுக்கள் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் உள்ள ஹிந்துக்களை ஒருங்கிணைக்க வைத்துள்ளது. மாநாட்டில் பங்கேற்றவர்களை தாண்டி பேஸ் புக், எக்ஸ் தளம், யு டியூப் சேனல்கள் மூலம் பல லட்சம் பேரை சென்றடைந்துள்ளது. குறிப்பாக மாநாட்டில் கந்த சஷ்டி கவசம் பாடியது 'டிவி', தினமலர் உட்பட பல்வேறு யுடியூப் வாயிலாக ஒரு கோடிக்கு மேற்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்து பிரமிக்க வைத்துள்ளது.

ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டை முழுமையாக யுடியூப் வழியாக பார்வையிட்டுள்ளனர். நேரலை அனுமதி பெற்ற 'டிவி' சேனல்கள், தினமலர் உட்பட 100க்கும் மேற்பட்ட யுடியூப் சேனல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நேரலையில் இம்மாநாட்டை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர். இது ஒரு பிரமாண்ட சாதனை.ஆன்மிகத்திற்கு என ஒரு சக்தி உள்ளது என இந்த மாநாடு நிரூபித்துள்ளது என்றனர்.

Advertisement