முருக பக்தர்கள் மாநாடால் தி.மு.க., கூட்டணிக்கு பயம்

சிவகாசி: ''தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளுக்கு மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு பயத்தை கொடுத்துள்ளது,'' என சிவகாசியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாதுரையை விமர்சனம் செய்யும் வகையில் வீடியோவை ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது. மறைந்த முன்னாள் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதை தவிர்த்திருக்கலாம்.

ஒரு நிகழ்ச்சியில் நடக்கின்ற நல்ல நிகழ்வுகளைப் பற்றி பேசுவோம். அதில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி பேசி ஒட்டுமொத்த மாநாட்டின் நல்ல கருத்துக்களை புறக்கணிக்க முடியாது. தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளுக்கு முருக பக்தர்கள் மாநாடு பயத்தையும் பீதியையும் கொடுத்துள்ளது. அந்த மாநாடு ஆன்மிகத்தின் அடையாளமாக நடந்த, பக்தர்களின் மாநாடு. தி.மு.க., வுடன் திருமாவளவன் மனதளவில் உறவை முறித்துக் கொண்டார், பெயரளவில் மட்டுமே உறவை வைத்துள்ளார்.

கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தி.மு.க., மீது அதிருப்தியில் உள்ளன. தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணி முறிய அதிக வாய்ப்புள்ளது. தி.மு.க., ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள் அ.தி.மு.க., தலைமையில் இணையும் காலம் விரைவில் வரும்.

பழனிசாமியை தொட்டுப் பார்க்கவோ, அவரது வாழ்வியல் முறையிலோ, கருத்தியல் முறையிலோ தாக்குதல் நடத்தினால் அ.தி.மு.க.,வின் எதிர் தாக்குதல் கடுமையாக இருக்கும். எங்கள் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வெடிகுண்டாக வரும். தி.மு.க., ஐடி விங் தனது மூர்க்கத்தனமான செயல்பாடுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தி.மு.க.,வின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணுகின்ற தலைவர்களில் ஒருவராக விஜய் இருக்கிறார். எனவே அவர் அ.தி.மு.க.,வோடு கைகோர்ப்பதுதான் சிறந்த முடிவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement