முதியோர் இல்லத்தில் பலி எண்ணிக்கை 6 ஆனது

தென்காசி: தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் உணவு மற்றும் குடிநீர் மாசுபாட்டால் உடல் நலம் பாதித்து சிகிச்சையில் இருந்த முதியவர் நேற்று பலியானார். இதையடுத்து இறந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆனது.

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில், ராஜேந்திரன் என்பவர் அன்னை முதியோர் இல்லம் நடத்தி வந்தார். அங்கு 60க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டனர். ஜூன் 11ல் அங்கு அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் செங்கோட்டை, சங்கர்கணேஷ் 42, அம்பிகா 40, சொக்கம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி முருகம்மாள் 60, ஆகியோர் இறந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மதுரை தனலெட்சுமி 80, இடைகால் முப்பிடாதி 54 அடுத்தடுத்து இறந்தனர். சிகிச்சையில் இருந்த கோவில்பட்டி மூப்பன்பட்டியை சேர்ந்த செல்வராஜ் 74, நேற்று உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 6 ஆனது.

Advertisement