வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரி : வாகனங்களில், வேகக் கட்டுப்பாட்டு சாதனங்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என அதற்கான வழிகாட்டுதல்களை புதுச்சேரி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு சாதனங்கள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த மே 9ம் தேதி வெளியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, சில தவறான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. அத்துடன், சில அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களும், தங்களது கருத்துக்களை புகார் மனு மூலம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, புதுச்சேரியில் வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு குறித்து சில நடைமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.

அனைத்து வாகன விவரங்களும் VAHAN 'வாகன்' தரவுத்தளத்தின் அடிப்படையில் நிபந்தனையுடன் சரிபார்க்கப்பட வேண்டும். அனைத்து விண்ணப்பங்களும் செல்லுபடியாகும் உற்பத்தி ஒப்புதல் சான்றிதழ் உடன் மட்டுமே ஏற்கப்படும். வேகக் கட்டுப்பாட்டு சாதனங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை மாவட்ட சாலை போக்குவரத்து ஆய்வாளர்கள் நேரில் பரிசோதனை மேற்கொள்வர். இந்த பரிசோதனை முடிந்த பிறகே உள்நுழைவு அனுமதிகள் வழங்கப்படும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை முழுமையாக பின்பற்றுவதற்காக இந்த நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கோ, தவறான சான்றிதழ்களுக்கோ அனுமதி வழங்கப்படாது.

அத்துடன், அனைத்து தொடர்புடைய தரப்பினரும் சட்டப்பூர்வமான முறையில் முழுமையான ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement