சொத்து பெயர் மாற்ற ரூ.2000 லஞ்சம் பேரூராட்சி பெண் அலுவலர் கைது

நாகர்கோவில்: சொத்து பெயர் மாற்ற இண்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பேரூராட்சி பெண் இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு அருகே குட்டிகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜோபின் 39. இவர் பாகோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடுடன் கூடிய 8 சென்ட் நிலம் வாங்கி உள்ளார். இதற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டி பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த மனு சம்பந்தமாக உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய இளநிலை உதவியாளர் விஜி கூறி உள்ளார். மேலும் 2000 ருபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஜோபின் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அவர்களது ஆலோசனைப்படி ரசாயனம் தடவப்பட்ட பணம் 2 ஆயிரம் ரூபாயை ஜோபின், கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி விஜியை கைது செய்தனர்.

தகவல் அறிந்து அங்கு திரண்ட பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் விஜியை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இருப்பினும் போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு இதே அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement