ஆண்டுக்கு ரூ.20 லட்சம் செலவிட்டும் பயன்தராத ஆண்கள் கருத்தடை திட்டம்

தமிழகத்தில், ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவிட்டும், ஆண்கள் கருத்தடை எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. கடந்தாண்டில், 659 பேர் மட்டுமே கருத்தடை செய்துள்ளனர்.

தமிழகத்தில் குடும்ப கட்டுப்பாட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், மக்கள் தொகை கணிசமாக உயராமல் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 8 கோடி வரை மக்கள்தொகை இருக்கலாம் என, கூறப்படுகிறது.

குடும்ப கட்டுப்பாட்டு முறையில் பெரும்பாலும் பங்கேற்பது பெண்கள் தான். தமிழகத்தில், பெண்கள் தான் 99 சதவீதம் கருத்தடை செய்து கொள்கின்றனர்.

பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு பாதுகாப்பான கருத்தடை சிகிச்சை முறைகள் இருந்தாலும், ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை அரசு செலவிட்டாலும், ஆண்கள் கருத்தடை எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.

இதுகுறித்து, குடும்ப கட்டுப்பாடு நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை, வயிற்றுக்குள் செய்ய வேண்டியிருக்கும். அதில், 10,000 பெண்களில், ஒருவர் உயிரிழக்க வாய்ப்புள்ளது.

ஆனால், ஆண்கள் கருத்தடை மிகவும் எளிது. விரைக்கு மேல் உள்ள விந்து குழாயில் அறுவை சிகிச்சை செய்வது எளிது. மருத்துவமனையில் அனுமதிக்காமல், 15 நிமிடங்களுக்குள் கருத்தடை செய்ய முடியும்.

ஆண்கள் கருத்தடை செய்வதால், ஆண்மை குறைவு ஏற்படும் என்ற தேவையற்ற அச்சம் உள்ளது. இந்த அச்சம் வந்தாலே விரைப்புத்தன்மை பாதிக்கப்படும். பயம், பதற்றம் போன்ற உளவியல், உடலுறவை பாதிப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், கருத்தடையால் ஆண்களுக்கு எவ்வித உடல்நல பாதிப்பும் ஏற்படாது.

கடந்த 1960 - 1970ம் காலகட்டத்தில், கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அதன்பின் பரவிய வதந்தி, தேவையற்ற பயம் போன்ற காரணத்தால், தற்போது குறைந்துள்ளது.

தமிழக அரசு, பெண்கள் நலனில் அக்கறை கொள்ளும் வகையில் ஆண்கள் கருத்தடையை ஊக்குவிக்கிறது. இதற்காக, ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் செலவிடுகிறது. கருத்தடை செய்து கொள்வோருக்கு, 1,100 ரூபாய் இழப்பீடு வழங்குகிறது. ஆனாலும், கடந்தாண்டு 659 பேர் மட்டுமே கருத்தடை செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையை அதிகரிக்க, கருத்தடை செய்யும் ஆண்களுக்கு மேலும் சில சலுகைகள் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.




- நமது நிருபர் -

Advertisement