நகர்ப்புற உள்ளாட்சி கடைகள் குத்தகைக் காலம் மாற்றம் உயர்நீதிமன்றம் தடை

மதுரை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகங்களுக்கு குத்தகைக் காலத்தை 3 ஆண்டுகளுக்கு பதிலாக 9 ஆண்டுகளாக மாற்றம் செய்த அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிவராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்திலுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகங்களை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு அனுமதிக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை 2024 ஆக., 6ல் அரசாணை பிறப்பித்தது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டப்படி அதற்கு சொந்தமான எந்தவொரு நிலம் அல்லது கட்டடத்தை 3 ஆண்டுகளுக்கு மட்டுமே யாருக்கும் குத்தகைக்கு வழங்க முடியும். இதில் மாற்றம் செய்தது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் மற்றும் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது.

குத்தகைக் காலம் முடிவடைவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு உரிமதாரர்களின் ஆலோசனையுடன் வாடகையை மறுசீரமைக்க வேண்டும்.

உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என அரசாணையில் உள்ளது. இது அதே குத்தகைதாரர்களுக்கு உரிமத்தை நிரந்தரமாக புதுப்பிக்க அதிகாரம் அளிக்கிறது. உள்ளாட்சி அமைப்பிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும். பொது ஏலத்தில் பங்கேற்பதில் பலருக்கு சம வாய்ப்பு மறுக்கப்படும். ஒன்பது ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது ஏகபோகங்களை உருவாக்கும்.

குத்தகைக் கால மாற்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: குத்தகைக்காலத்தை மாற்றியமைத்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.

Advertisement