ஜூலை 14ல் மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு; திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்திற்காக

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்திற்காக ஜூலை 14ல் மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைக்கப்படுகிறது. ஜூலை 13 மாலை 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

கும்பாபிஷேகத்திற்காக மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் முந்தைய நாளான ஜூலை 13 இரவு புறப்பாடாகி திருப்பரங்குன்றம் செல்கின்றனர்.

இதன் காரணமாக ஜூலை 13 மாலை 6:00 மணி வரை மீனாட்சி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதன்பிறகு பூஜைகள் நடந்து இரவு 10:00 மணிக்கு மேல் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சுவாமி புறப்பாடு நடக்கும்.

ஜூலை 14 கும்பாபிஷேக விழாவில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பாடாகி இரவு மீனாட்சி கோயிலுக்கு அம்மனும், சுவாமியும் திரும்புவர். அன்று நாள் முழுவதும் மீனாட்சி கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும்.

ஜூலை 13 மாலை 6:00 மணி முதல் ஜூலை 14 வரை பக்தர்கள் ஆயிரங்கால் மண்டப கலைக்கூடத்தை பார்க்கவும், அன்னதானத்தில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுவர்.

ஜூலை 15 அதிகாலை வழக்கம் போல் கோயில் நடை திறக்கப்படும்.

Advertisement