சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு 'சிறப்பு இன்ஸ்பெக்டர்' பதவி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமா தி.மு.க.,

மதுரை:சிறப்பு எஸ்.ஐ.,க்கள் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் சிறப்பு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க., அரசு நிறைவேற்றுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., தேர்தல் அறிக்கையில், போலீசாக சேருபவர்கள் 10 ஆண்டுகளில் கிரேடு 1, அடுத்த 3 ஆண்டுகளில் ஏட்டு, அடுத்த 10 ஆண்டுகளில் சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் இதுகுறித்து எந்த அரசாணை வெளியிடப்படாத நிலையில், தேர்தல் நெருங்க இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.

அதே சமயம் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் சிறப்பு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சிறப்பு எஸ்.ஐ.,க்கள் புலம்புகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: 1993 ல் போலீஸ் பயிற்சி பள்ளிகள் அதிகம் இல்லாத சமயத்தில் 10 ஆயிரம் பேர் கிரேடு 2 ஆக தேர்வு செய்யப்பட்டு பேட்ச் பேட்ச் ஆக பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால் சீனியாரிட்டி பாதித்தது. எங்களுக்கு 33 ஆண்டுகளானால் சிறப்பு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்படும் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற உடனே இதை நிறைவேற்றியிருந்தால் எங்களில் பலர் சிறப்பு இன்ஸ்பெக்டராகி ஓய்வுபெற்றிருப்போம். ஆனால் அரசு கண்டுகொள்ளாததால் இந்த நான்கரை ஆண்டுகளில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பதவி உயர்வுபெறாமலேயே ஓய்வுபெற்றுவிட்டனர்.

தி.மு.க., அரசு பதவி உயர்வு வழங்க தயாராக இருந்தாலும் அதற்கேற்ற பணியிடம் இல்லை என உயர் அதிகாரிகள் முட்டுக் கட்டை போட்டு வருகின்றனர். அரசு நினைத்தால் புதிய பணியிடங்கள் உருவாக்கலாம். உதாரணமாக தாலுகா ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே உள்ளார். குற்றப்பிரிவுக்கும், நீதிமன்ற வழக்குகளை விசாரிக்கவும், நிர்வாக பணிகளை மேற்கொள்ளவும் தனித்தனி இன்ஸ்பெக்டர் பணியிடம் உருவாக்கலாம். இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement