'முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை செயல்படுத்துவதுதான் அடுத்தகட்ட பணி' காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி

1

மதுரை:''மதுரையில் வெற்றிகரமாக நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துவதே எங்களது அடுத்தகட்ட பணியாக இருக்கும்,'' என, மதுரையில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று முன்தினம் ஹிந்து முன்னணி சார்பில் மாபெரும் முருகபக்தர்கள் மாநாடு நடந்தது. லட்சக்கணக்கானோர் திரண்டனர். போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும், மாநாடு வளாகத்திற்குள் தன்னார்வலர்களே ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஒரு சிறு அசம்பாவிதமின்றி வெற்றிகரமாக நடந்ததால் உற்சாகமடைந்த ஹிந்து முன்னணி நிர்வாகிகள் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில், நேற்று போலீஸ் கமிஷனர் லோகநாதனை சந்தித்தனர்.

மாநாட்டிற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள் செய்ததற்கு நன்றி தெரிவித்தனர். பொருளாளர் பக்தவத்சலம், மாநாடு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் உடனிருந்தனர்.

பின்னர் நமது நிருபரிடம் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறியதாவது: தன்னெழுச்சியாக கூடியவர்களால் மாநாடு வெற்றிகரமாக நடந்தது. நாங்கள் பிற கட்சிகள் போல் வாகன ஏற்பாடு செய்து ஆட்களை அழைத்து வரவில்லை. வந்தவர்களுக்கு உணவு, குடிநீர் தேவைகளை குறையின்றி பார்த்துக்கொண்டோம். மாநாட்டில் திருப்பரங்குன்றம் மலை மீது மீண்டும் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும். முருகன் மலைகளை காக்க வேண்டும்.

கோயில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை செயல்படுத்துவதுதான் எங்களது அடுத்தகட்ட பணியாக இருக்கும். அதை விரைவில் துவக்குவோம். இவ்வாறு கூறினார்.

Advertisement