மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள் இணைந்து பூத்களை வலுப்படுத்த பழனிசாமி உத்தரவு இன்றும் நாளையும் ஆலோசனைக்கூட்டம்
மதுரை: ஓட்டுகளை உறுதிசெய்யும் பூத்களை வலுப்படுத்தினால்தான் வெற்றி பெற முடியும் என உணர்ந்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் இணைந்து அதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து இன்றும், நாளையும் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பின் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால், எப்படியும் ஆட்சியை பிடித்தாக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். பன்னீர்செல்வம், தினகரனால் கட்சியில் பிளவு ஏற்பட்ட போதிலும் அ.தி.மு.க.,வுக்கென உள்ள ஓட்டு வங்கியை தக்க வைக்கவும், இளைஞர்களை உறுப்பினராக்கவும் மாவட்டந்தோறும் பூத் கமிட்டிகளை அமைத்து அதற்கு பொறுப்பாளர்களை பழனிசாமி நியமித்தார்.
குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை அவர்களுடன் ஆலோசனை நடத்தி ஓட்டுகளை உறுதி செய்து வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் '30 சதவீத வாக்காளர்களை உறுப்பினராக்க வேண்டும்' என தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தினார். இது அ.தி.மு.க.,வினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பூத் அளவில் ஆட்களை நியமித்து வாக்காளர்களை இப்போதே அ.தி.மு.க., பின்தொடர்ந்து வரும் நிலையில் தி.மு.க., அதில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர். இதுதொடர்பாக ஆலோசிக்க இன்றும், நாளையும் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டிகளுக்கு நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.
மதுரை நகர் செயலாளர் செல்லுார் ராஜூ கூறுகையில், ''மாவட்ட வாரியாக ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் பூத் விபரங்கள், நியமிக்கப்பட்ட குழுவின் பணிகள் குறித்து விவாதித்து தேவையான அறிவுரைகளை பழனிசாமி வழங்குவார்'' என்றார்.
திருநெல்வேலி பூத் கமிட்டி பொறுப்பாளரான டாக்டர் சரவணன் கூறுகையில், ''ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. பூத்திற்கு தலா 9 பேர் பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டுகள், வாக்காளர்களை பின்தொடர்ந்து வருகின்றனர். புதியவர்களையும் உறுப்பினராக்க வேண்டும். இதுதொடர்பாக அடிக்கடி ஆலோசனைக்கூட்டம் நடத்துவதோடு, தினமும் வாட்ஸ் ஆப்பில் அறிவுரைகளை வழங்கி, மாலைக்குள் அதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். அ.தி.மு.க., பூத் கமிட்டிகள் வலுவாக உள்ளன'' என்றார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: தமிழக காவல் துறையில் சேரும் காவலர்களுக்கு, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, பணியில் சேரும் இரண்டாம்நிலைக் காவலர்கள் 10 ஆண்டுகளில், முதல்நிலைக் காவலர்களாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏட்டாகவும், அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 25 ஆண்டுகளில், எஸ்.எஸ்.ஐ.,யாகவும் பதவி உயர்வு பெறுவர்.இந்நிலையில், தமிழக அரசு ஜூன் 13ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், முதல்நிலைக் காவலராக ஐந்து ஆண்டு பணியாற்ற வேண்டும் என்பதை, மூன்று ஆண்டுகளாக குறைத்துள்ளனர். 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு, எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்படும் என, 2021 தேர்தலில் தி.மு.க., வாக்குறுதி அளித்தது. தற்போது, இந்தப் புதிய உத்தரவால், 2001 முதல் 2005 காலகட்டங்களில் பணியில் சேர்ந்த 35,000 காவலர்களுக்குப் பாதிப்பு ஏற்படும். அதிக அளவிலான காவலர்களை பாதிக்கும் இந்த உத்தரவை, தி.மு.க., அரசு திரும்பப்பெற வேண்டும். பணியில் உள்ள காவலர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், 20 ஆண்டு பணிமுடித்த காவலர்களுக்கு எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்