இரண்டு நாளில் ரூ.1.72 கோடிக்கு சாராயம், கள்ளுகடைகள் ஏலம்

புதுச்சேரி : இரண்டு நாளில் ரூ.1.72 கோடிக்கு சாரயம் மற்றும் கள்ளூக்கடைகள் ஏலம் போனதால், புதுச்சேரியில் சாராய, கள்ளூக்கடை ஏலம் சூடு பிடித்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மொத்தம் 151 சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் உள்ளன. இதில் புதுச்சேரியில் உள்ள 85 சாராயக் கடைகளில் 8 கடைகளும், 66 கள்ளுக்கடைகளில் 14 கடைகளும் புதுப்பிக்கப்பட்டது.

காரைக்காலில் உள்ள 25 சாராயக் கடைகளில் 17 கடைகளும், 26 கள்ளுக் கடைகளில் 6 கடைகள் புதுப்பிக்கப்பட்டது. மீதியுள்ள கடைகளுக்கான ஏலம் கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கடந்தாண்டு அதிகத் தொகைக்கு ஏலம் எடுத்ததும் பெரிய அளவு வருவாய் கிடைக்காததால், வியாபாரிகள் இந்தாண்டு ஏலத்தில் ஆர்வம் கட்டாமல் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்தாண்டு ஏலத் தொகை 5 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை நடந்த ஏலத்தில் புதுச்சேரியில் 19 சாராயக்கடைகளும், 2 கள்ளுக்கடைகளும், காரைக்காலில் 2 சாராயக் கடைகள் ரூ.82 லட்சத்திற்கு ஏலம் போனது.

நேற்று நடந்த ஏலத்தில் புதுச்சேரியில் 23, காரைக்காலில் 5 என மொத்தம் 28 சாராயக் கடைகளும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தலா ஒரு கள்ளுக்கடையும் ரூ.90 லட்சத்திற்கு ஏலம் போனது.

கடந்த 2 நாட்கள் நடந்த ஏலத்தில் 49 சாராயக்கடைகள் மற்றும் 4 கள்ளுக்கடைகள் மொத்தம் ரூ.1.72 கோடிக்கு ஏலம் போனதால், மீதமுள்ள 73 சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளுக்கான ஏலத்தில் போட்டி அதிகமாக இருக்கும் என கலால் துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement