எப்.ஐ.ஆரை தமிழில் பதிவு செய்ய போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவு

புதுச்சேரி : போலீஸ் ஸ்டேஷன்களில் இனி தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய டி.ஜி.பி., ஷாலினிசிங் உத்தரவிட்டுள்ளார்.

டி.ஜி.பி., அலுவலக செய்திகுறிப்பு:

புதுச்சேரி மாநில போலீஸ் ஸ்டேஷன்களின் முதல் தகவல் அறிக்கையை, பிராந்திய மொழிகளில் பதிவு செய்வது தொடர்பாக, உயர்மட்ட குழு கூட் டம் நடந்தது.

அதில், குற்றவியல் நீதித்துறை அமைப்பை எளிதில் அணுகும் வசதியையும், வெளிப்படைத் தன்மையையும் மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.,) பிராந்திய மொழிகளில் பதிவு செய்ய உத்தரவு பிறபித்தார்.

அதையடுத்து, கவர்னர் கைலாஷ்நாதன் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி டி.ஜி.பி., ஷாலினிசிங், புதுச்சேரி, காரைக்காலில் பிராந்திய மொழியான தமிழிலும், மாகியில் மாலையாளத்திலும், ஏனாமில் தெலுங்கு மொழியிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் ஸ்டேஷன்களின் இனி பிராந்திய மொழிகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நடைமுறை கட்டாயமாகிறது. இந்த நடவடிக்கை சட்ட நடைமுறைகளை, உள்ளூர் மக்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

மேலும், போலீஸ் துறையின் மீது மக்களிடையே நம்பிக்கையும் நெருக்கமும் அதிகரிக்க வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement