புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக 2025-2026ம் கல்வியாண்டு முதுகலை பட்டப்படிப்புகளில் சேர ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழக முதுகலை சேர்க்கை்குழு சேர்மன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தில் 2025-2026ம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்புகளான எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., மற்றும் எம்.எஸ்.சி., (மெட்டீரியல் சயின்ஸ்) அண்டு டெக்னாலாஜி)-யில் சேர தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள இடங்களும், தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இந்த மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

மாணவர் சேர்க்கையை புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலுள்ள முதுகலை சேர்க்கைக் (பிஜிஏசி-2025) குழு மேற்கொள்ளும்.

மேலும் ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதிவரை இந்த படிப்புகளுக்கு மாணவர்கள் இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இந்த சேர்க்கையில் இடம்பெறும் கல்லுாரிகள், பாடப்பிரிவுகள், கல்வித்தகுதி, கிடைக்கப் பெறும் இடங்களின் எண்ணிக்கைப்போன்ற விவரங்களை www.ptuniv.edu.in மற்றும் www.pgac pdy.in வலைத்தளத்தை பார்த்து அறியலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement