கிரைம் செய்திகள்...

கஞ்சா விற்றவர் கைது



செஞ்சி இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று மாலை 4:00 மணியளவில் நாட்டார்மங்கலம் கூட்ரோடு பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்பாது அங்கு, சந்தேகப் படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் கவரை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் தினேஷ் என்கிற மணிகண்டன், 22; என்பதும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 330 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மனைவி கண்டிப்பு: கணவர் தற்கொலை



திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கோபுலாபுரத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 64; கூலித் தொழிலாளி. இவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். கடந்த 21ம் தேதி மாலை 4:00 மணியளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார். இதனை அவரது மனைவி வெண்ணிலா கண்டித்தார்.

இதனால், மனமுடைந்த அவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மகள் சாவில் சந்தேகம்: தந்தை புகார்



செஞ்சி அடுத்த தடாகம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாரத் மனைவி சரிதா, 22; டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் ராமராஜன்பேட்டையில் சரிதாவின் தந்தை சிவகுமாருக்கு பாரத் போன் செய்து சரிதா துாக்கு போட்டு இறந்தாக கூறியுள்ளார்.

இதுகுறித்து சிவகுமார், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில், நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மினி லாரி மோதி மூதாட்டி பலி



திண்டிவனம் அடுத்த எறையானுார் எடையான்குளத்தைச் சேர்ந்தவர் அனுசுயா, 75; இவர், நேற்று மாலை திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி எறையானுாரில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் சென்ற மினி லாரி, அவர் மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே அனுசுயா இறந்தார். கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குட்கா விற்றவர் கைது



திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் நேற்று பேரங்கியூர் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையெடுத்து போலீசார் நேரில் சென்று சோதனை செய்து கடையில் இருந்து 41 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் பலராமன், 45; என்பவரை கைது செய்தனர்.

அடையாளம் தெரியாதவர் சாவு



விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி ஆர்ச் கேட் அருகே 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர், கடந்த 22ம் தேதி மயங்கி கிடந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி



விருதுநகர் மாவட்டம், நரிக்குடி சாலை மறைக்குளத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 50; கடந்த 3 மாதங்களாக, விழுப்புரம் விவேகானந்தா நகரில் நடைபெறும் கட்டட பணியில் ஈடுபட்டு வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சார ஒயர் இணைப்பை மிதித்ததில் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.

உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement