உளுந்துார்பேட்டை தி.மு.க.,வின் கோட்டை என்பதை தேர்தலில் நிரூபிக்க வேண்டும்; அமைச்சர் வேலு பேச்சு

உளுந்துார்பேட்டை : 'உளுந்துார்பேட்டை தொகுதியை தி.மு.க.,வின் கோட்டை என்பதை வரும் தேர்தலில் நிரூபிக்க வேண்டும்' என அமைச்சர் வேலு பேசினார்.

உளுந்துார்பேட்டையில் தி.மு.க., சட்டசபை தொகுதி அலுவலகத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு திறந்து வைத்து பேசியதாவது:

தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுப்பதற்காக தான் இந்த தேர்தல் அலுவலகத்தை திறந்து இருக்கிறோம். தி.மு.க., ஆட்சியில் திட்டங்களை அறிவிப்பதோடு அல்லாமல் அதனை விரைந்து செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறோம்.

கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகத்தை இன்னும் 3 மாதத்தில் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். ஒரு பானை சோறுக்கு ஒரு பருக்கை சோறு பதம் பார்ப்பதுபோல், தி.மு.க.,வின் ஒவ்வொரு செயல் திட்டமும் அதுபோல இருக்கும்.

உளுந்துார்பேட்டைக்கு கல்லுாரி வருவதற்கு முழுக்க முழுக்க முதல்வர் ஸ்டாலின் தான் காரணம். இளைஞருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக சிப்காட் தொழிற்சாலை கொண்டு வந்தார்.

உளுந்துார்பேட்டை தொகுதி இப்போதே தி.மு.க.,வின் கோட்டையாக இருப்பதால் வெற்றி பெறும் தொகுதியாகத்தான் ஓட்டு வித்தியாசம் பார்க்கத்தான் இந்த தேர்தல்.

இந்த தொகுதியில் போட்டியிட யாரை முதல்வர் அறிவிக்கின்றாரோ அவரை ஜெயிக்க வைத்து, 100 சதவீதம் வெற்றி பெற்று, உளுந்துார்பேட்டை தி.மு.க., வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வேலு பேசினார்.

Advertisement