கடன் இல்லை சான்று உடனடி வழங்க உத்தரவு தினமலர் செய்தி எதிரொலி

நெல்லிக்குப்பம் : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக நெல்லிக்குப்பத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் நிலுவை இல்லை என்று சான்று உடனடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் வசதி பெற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் நிலுவை இல்லை என்ற சான்று வாங்கி வர வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், புதியதாக கடன் வாங்கும் விவசாயிகளுக்கு மட்டுமே இதுபோன்ற சான்று வாங்கி வர வேண்டும் என்ற நடைமுறை இருந்த நிலையில், தொடர்ந்து, கடன் வாங்கும் விவசாயிகளையும் இச்சான்று வாங்கி வருமாறு அதிகாரிகள் கூறினர்.

இதற்காக நெல்லிக்குப்பத்தில் உள்ள நான்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சான்று வாங்க நேரம் விரயம், கட்டணம் வசூலிப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இதுகுறித்து விவசாயிகள், ஆர்.டி.ஓ., அபிநயாவிடம் புகார் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு கடன் நிலுவை இல்லை என்ற சான்று உடனடியாக வழங்க வேண்டும் எனவும், இதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும், அனைத்து வங்கி மேலாளர்களுக்கும் முதன்மை வங்கி மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement