நோயாளிகளின் நலன் போல டாக்டர்கள் பாதுகாப்பும் அவசியம்: மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை : ''நோயாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதை போல், டாக்டர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அவசியம்,'' என, மஹாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை, கே.கே. நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி, நான்காவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

இதில் மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, 179 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

பொதுவாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும், முழுமையான திருப்தியுடனோ, மகிழ்ச்சியுடனோ காணப்பட மாட்டார்கள்.

ஆனால், இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் மருத்துவ சேவையை பொருத்தவரை, அதற்கு நேர்மாறாக அனைவரும் மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் உள்ளனர்.

அர்ப்பணிப்பு உணர்வு, கடமை உணர்வு, சேவை மனப்பான்மையுடன் பணியாற்றினால், அதற்கான பலன்கள் கிடைத்தே தீரும் என்பதற்கு இதுவே சான்று.

நோயாளிகளை கனிவுடனும், கண்ணியத்துடனும், பொறுமையுடனும் டாக்டர்கள் அணுக வேண்டும். ஒருபுறம் நோயாளிகள் நலனை உறுதி செய்வது முக்கியம் என்றால், மற்றொருபுறம் டாக்டர்களின் பாதுகாப்பும் அவசியம்.

மஹாராஷ்டிராவில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், ஆயுதம் ஏந்திய போலீசார் காவலுக்கு இருப்பர். டாக்டர்களுக்கு ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால், தலையிட்டு தீர்த்து வைக்கின்றனர். அதன்படி, டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

நாளைய சமூகத்தின் நம்பிக்கையாக விளங்கும் மாணவர்கள், மனிதநேயத்துடன், சமூக நலனுக்காக செயல்பட வேண்டும். மக்களுக்கு ஆற்றும் சேவை, நாட்டுக்கான சேவை என்பதை உணர்ந்து, டாக்டர்கள் செயல்பட வேண்டும்.

பெண்களுக்கான அதிகாரத்தையும், ஆற்றலையும், கல்வியறிவு வாயிலாக அவர்களே கையகப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்படும்போது, அவற்றை வேறு எவரும் பெற்றுத் தர வேண்டிய அவசியம் எழாது. கல்வி தான் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பேராயுதம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி முதல்வர் டாக்டர் காளிதாஸ், டாக்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement