மழையில் நனைந்து சேதமான நெல் மூட்டைகள்; அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்

திருபுவனை: மதகடிப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்னைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்துசேதம் அடைந்ததால், அதிகாரிகளிடம்-விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மதகடிப்பட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்பட்டது. இங்கு மதகடிப்பட்டை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல், மணிலா, கம்பு, கேழ்வரகு, உளுந்து, எள், காராமணி, உள்ளிட்ட தானியங்களை விற்பனை செய்து வருகின்றனர்.இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் விற்னைக்கு கொண்டு வரும் தானியங்களை எடைபோடும் இடம் சிமெண்ட் ஷீட்டால் ஆன மேற்கூரை உடைந்து சேதம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் 50க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தது. விவசாயிகள் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் அதிகாரிகளுக்கும்-விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அதிகாரிகள் விவசாயிகளை சமாதானம் செய்து, நனைந்த நெல் மூட்டைகளை காய வைத்து, எடைபோட்டு விற்பனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது;

25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஒழங்குமுறை விற்பனைக் கூடத்தில் தானியங்களை எடைபோடும் ெஷட் மற்றும் குடோன் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்துள்ளது.

தரை தளம் சேதம் அடைந்துள்ளது. மழைக்காலங்களில் மூட்டைகளை பாதுகாக்க தார்பாய் இல்லை.

அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஒழுங்குமுறைவிற்பனைக் கூடத்தை நேரில் ஆய்வு செய்து, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement