வாயில் வடை சுடும் தி.மு.க., எடுத்த நடவடிக்கை என்ன? அண்ணாமலை கேள்வி

16

சென்னை: ''வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருப்பதைத் தவிர, புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் அமைக்க என்ன முயற்சி எடுத்தது தி.மு.க.,?'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.


அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியின் மீதான அதிருப்தியையும், கோபத்தையும் தமிழக மக்கள் வெளிப்படையாகக் காட்டும் போதெல்லாம், போலி தமிழ்ப்பற்று நாடகமாடி, பிரிவினையைத் தூண்டுவது தி.மு.க.,வின் ஆதிகால வழக்கம். தி.மு.க.,வின் தொடர்ச்சியான ஹிந்து மத விரோதப் போக்கை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய பல லட்சம் தமிழக மக்களின் உணர்வு, தி.மு.க.,வை ஆட்டம் காண வைத்திருக்கிறது.


உடனே சில வாடகை வாயர்களைத் தூண்டிவிட்டு, ஏற்கனவே பல முறை விளக்கமளித்த மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து பொய்யான பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அரைத்த மாவையே நீங்கள் மீண்டும், மீண்டும் அரைப்பதனால், இதோ மொழி வாரியாக வழங்கப்படும் நிதி தொடர்பாக நான் விளக்கமளித்த காணொளி உங்கள் பார்வைக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே.


தமிழகத்தில் பல முறை ஆட்சியில் இருந்தும், மத்தியில் பசையான அமைச்சர் பதவிகளை வகித்தும், அப்பா, மகன், பேரன் என தலைமுறை தலைமுறையாக தமிழ்ப்பற்று என்று வெறும் வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருப்பதைத் தவிர, கேரளா மாநிலத்திலோ, கர்நாடகாவிலோ, ஆந்திர மாநிலத்திலோ, புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் அமைக்க என்ன முயற்சி எடுத்தது திமுக? யார் உங்களைத் தடுத்தார்கள்?


நீங்கள் மத்திய அரசில், அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு, உலகம் போற்றும் ஊழல்களைச் செய்து கொண்டிருந்த 2006 முதல் 2014ம் ஆண்டு வரை, 8 ஆண்டுகளில், நீங்கள் அங்கம் வகித்த மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ரூ.675.36 கோடி. தமிழுக்கு வெறும் ரூ.75.05 கோடி மட்டுமே. அப்போது எங்கு சென்றது இந்த வாடகை வாய்கள்? கடந்த ஆண்டு, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.11.68 கோடி ரூபாய் செலவிட்டதே. அது எதற்காக என்று கூற முடியுமா? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement