'நீட்' தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

திருப்பூர்; திருப்பூரில், மருத்துவ படிப்பில் நுழைய, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் 'நீட்' தேர்வெழுதி மருத்துவ படிப்பில் இணைய ஆண்டுதோறும் ஏரளமான மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வரிசையில், திருப்பூர் மாவட்டத்திலும், தனியார், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட பின், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அதிகம் பேர், மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வெழுத ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த முறை நடந்த 'நீட்' தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில், 3,212 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மட்டும், 386 பேர் 'நீட்' தேர்வெழுத விண்ணப்பித்தனர். அவர்களில், 354 பேர் தேர்வெழுதினர். இதில், 163 மாணவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் உள்ளனர். இவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 4 கல்வி மாவட்டம் உள்ளது; 14 வட்டாரங்கள் உள்ளன. பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் 'நீட்' பயிற்சி வழங்கப்படுகிறது. தேர்வு முடிந்ததும், 40 நாட்களுக்கு, அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக பயிற்சி வழங்கப்படுகிறது. வார இறுதி நாட்களில், மாதிரி தேர்வும் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியர் தயார்படுத்தப்படுகின்றனர்.

இத்தகைய பயிற்சி வழங்குவதற்கென திருப்பூர், உடுமலை, பல்லடம், அவிநாசி, தாராபுரம் ஆகிய இடங்களில், பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன. 'நீட்' தேர்வெழுதுவதில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் ஆண்டுக்காண்டு ஆர்வம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

கடந்த முறை, 38 மாணவ, மாணவியர் மருத்துவ படிப்பில் இணைந்தனர். இம்முறை, எவ்வளவு என்பது கவுன்சிலிங் முடிவில் தெரியவரும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

'நீட்' தேர்வெழுதுவதில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் ஆண்டுக்காண்டு ஆர்வம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த முறை, 38 மாணவ, மாணவியர் மருத்துவ படிப்பில் இணைந்தனர்

Advertisement