புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில்... புது முயற்சி: மிதக்கும் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கிறது அரசு

சென்னை:புதிய முயற்சியாக, சென்னையைச் சுற்றியுள்ள புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய முக்கிய ஏரிகளில், 'புளோட்டிங் சோலார்' எனப்படும் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணி துவங்க உள்ளது.
ஆறு, ஏரிகளில் உள்ள நீர் ஆவியாவதை தடுக்கவும், மணல் உள்ளிட்ட கனிம வள கொள்ளையை தடுக்கவும், உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைக்கவும், நீர்நிலைகளின் மீது சூரியசக்தி மின் நிலையம் அமைக்குமாறு, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை, ஈரோடு பவானிசாகர் அணைகளுக்கு அருகில் தண்ணீரில் தலா, 100 மெகா வாட் திறனிலும்; தேனி வைகை அணை அருகில் தண்ணீரில், 50 மெகா வாட் திறனிலும், 'புளோட்டிங் சோலார்' எனப்படும் தண்ணீரில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க, 2018 - 19ல் தமிழக மின் வாரியம் முடிவு செய்தது. திட்ட செலவு, 1,120 கோடி ரூபாய்.
இத்திட்டத்தை மத்திய அரசின், 'சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன்' நிறுவனம் வாயிலாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்ட நிலையில், சாதகமான முடிவுகள் வராததால், 2021ல் அத்திட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில் தண்ணீரில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்கள் வெற்றிகரமாக அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகரில் மின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தவிர, மின் நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்விலும் சிக்கல் உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தின் விலை மிகவும் அதிகம் என்பதால், அம்மாவட்டங்களில் நிலத்தில் அதிக திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க இடம் கிடைப்பதில்லை.
அதேசமயம், இம்மாவட்டங்களில் ஏரிகள் அதிகம் உள்ளன. இதனால், 5 மெகா வாட், 10 மெகா வாட் திறனில் தண்ணீரில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க சாதகமான சூழல் இருப்பதாக மின் வாரியம், அரசுக்கு தெரிவித்தது.
அதன் அடிப்படையில், பி.பி.பி., எனப்படும் பொது - தனியார் கூட்டு முயற்சியில், சென்னைக்கு குடிநீர் வழங்க கூடிய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில், மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணியை, நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் மேற்கொள்ள, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
இத்திட்டம், ஜெர்மனியின் கே.எப்.டபிள்யூ., வங்கி நிதியுதவியில் செயல்படுத்தப்பட உள்ளது. ஆய்வை முடித்து, விரைவில் 'டெண்டர்' கோரி, இந்தாண்டு இறுதிக்குள் மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளை துவக்க, அரசு திட்டமிட்டுள்ளது.
புழல், பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் நீர்நிலைகள் தவிர, போரூர் உட்பட ஐந்து இடங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மீஞ்சூர், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் உள்ள மூன்று கடல் நீரை நன்னீராக்கும் ஆலைகள், கொடுங்கையூர், திருவொற்றியூர் உள்ளிட்ட, 20 இடங்களில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 119 குடிநீர் விநியோக நிலையங்கள், சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின், 222 அலுவலகங்களில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.
மேலும்
-
கொலை வழக்கு தண்டனை: உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
-
கமிஷனில் இயங்கும் காங்., அரசு பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தாக்கு
-
ஜனாதிபதி, நிதி அமைச்சருடன் முதல்வர் சித்தராமையா சந்திப்பு
-
பிரஜ்வல் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு
-
சொத்து குவித்த புகாரில் 8 அதிகாரிகள் வீடுகளில்... 'ரெய்டு!'; தங்க, வெள்ளி நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்
-
ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.16 கோடி காணிக்கை