முருக பக்தர்கள் மாநாட்டில் நாங்க வீடியோ பார்க்கவே இல்லை; சத்தியம் செய்கிறார் உதயகுமார்

மதுரை: ''மதுரை முருகபக்தர்கள் மாநாட்டில் அண்ணாதுரை, ஈ.வெ.ரா., குறித்து வீடியோ ஒளிபரப்பியது எங்களுக்கு தெரியாது. முழு வீடியோவை பார்க்க முடியவில்லை. ஏனென்றால் வீடியோ ஒளிபரப்பு செய்த இடத்தின் பின்புறத்தில் அமர்ந்து இருந்தோம்'' என அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.
மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் நடந்த முருகபக்தர்கள் மாநாட்டில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லுார் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி மற்றும் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., பங்கேற்றனர். மாநாட்டின் ஒரு பகுதியாக அண்ணாதுரை, ஈ.வெ.ரா குறித்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அ.தி.மு.க.,வுக்கு தி.மு.க., கண்டனம் தெரிவித்தது. இதன்பிறகு அ.தி.மு.க., விளக்கம் தெரிவித்தது.
மாநாட்டில் பங்கேற்றவர்களில் ஒருவரான ராஜேந்திர பாலாஜி, வீடியோ ஒளிபரப்பியதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, 'அதுகுறித்து மாநாட்டிலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அது நாகரீகமாக இருக்காது' என சமாளித்தார். இவரை தொடர்ந்து உதயகுமார் நேற்று கூறியதாவது:
அ.தி.மு.க., மீது அவதுாறு சொல்வதில்தான் தி.மு.க., அதிக நேரத்தை செலவு செய்கிறது. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்கள். அதில் அரசியல் இருக்காது என்று நம்பிக்கையோடு கலந்து கொண்டோம்.
மாநாட்டில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை குறித்து அவதுாறு வீடியோ ஒளிபரப்பப்பட்டதாக செய்தி வெளியானதற்கு நாங்கள் தெளிவாக பதில் கூறிவிட்டோம்.
ஒரு நாளும் கொள்கைகளை, கோட்பாடுகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பது மக்களுக்கும், தி.மு.க.,வுக்கும் தெரியும். பழனிசாமியை பொருத்தவரை ஜெயலலிதா பற்றி அண்ணாமலை அவதுாறாக பேசியதால் என்ன முடிவு எடுத்தார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பற்றி வீடியோ ஒளிபரப்பியது எங்களுக்கு தெரியாது. முழு வீடியோவை நாங்கள் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் வீடியோ ஒளிபரப்பு செய்த இடத்தின் பின்புறத்தில் அமர்ந்து இருந்தோம். அண்ணாதுரைக்கு இழுக்கு என்றால் அதற்கு முதல் குரல் கொடுக்கும் இயக்கம் அ.தி.மு.க.,தான். இவ்வாறு கூறினார்.

