போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் பாவம்

அவனியாபுரம் : ''போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் பாவம். அவருக்காக வருத்தம் தெரிவிக்கிறேன்,'' என, மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதியும், மற்ற மொழிகளுக்கு குறைவான நிதியும் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமஸ்கிருதம் பேசுகிற மாநிலங்களில் இருந்து நாட்டிற்கு வருமானம் எவ்வளவு கிடைக்கிறது.

தமிழ் பேசுகிற மாநிலத்திலிருந்து எவ்வளவு வருமானம் வருகிறது. தமிழுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு என்பதை செய்யாமலே இருந்திருக்கலாம். தமிழக மக்கள் இதை உணர வேண்டும்.

சமஸ்கிருதத்திற்கு இவ்வளவு நிதி ஏன் ஒதுக்க வேண்டும். ஏன் அதை வளர்க்க வேண்டும். 25 ஆயிரம் பேர் தான் இந்த மொழியை பேசுகிறார்கள்.

முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முருகனை தொட்டாலே ஒரு அரசியல் தான். முருக பக்தர் மாநாடு என்றால் அது அரசியல் இல்லையா. தேர்தலுக்கு ஆறு மாத காலம் இருக்கும் போது இதை தொட காரணம் என்ன. தற்போது மாநாடு போட்டவர்கள் அடுத்தாண்டு இதேபோல் ஆன்மிக மாநாடு போடுவார்களா. ஆண்டுதோறும் இதே போல் மாநாடு போட்டால் அது அரசியல் அல்ல, அக்கறை.

நீண்டநாட்களாக மாம்பழத்திற்கு உரிய விலை இல்லை என விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகள் கோரிக்கைக்கு என்றைக்கு எந்த அரசு செவி சாய்க்கிறது.

விவசாயத்துக்கு இவர்கள் தரும் முதன்மைத்துவம் அவ்வளவுதான். விவசாயிகள் இதை உணர வேண்டும். மாம்பழத்திற்கு ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வரின் பிரதிநிதியாக தமிழக அமைச்சர்கள் கூட நேரில் சென்று பிரதமர் மோடியை இதற்காக பார்க்கலாம். கடிதம் எழுதுவது என்பது கண் துடைப்பு தானே.

திருப்பரங்குன்றம் கோயிலில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழிலும் என்ற அமைச்சர் கூறியது பிச்சை போடுகிறீர்களா என்று கேள்வி கேட்க துாண்டுகிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, மலேசியாவில் இருக்கும் முருகன் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தும்போது தமிழிலும் என்பது போனால் போகிறது என்பது போல் அர்த்தம்.

நடிகர் ஸ்ரீகாந்தை தனிப்பட்ட முறையில் எனக்குத்தெரியும். என் கருத்து அவர் பாவம். திரையில் எனக்கு தெரிந்தவரை நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள். அவர் தெரியாமல் சிக்கிக்கொண்டார்.

அதிகாரங்களுக்கு தெரியாமல் போதைப் பொருட்கள் வராது. திரையுலகம் மட்டுமல்ல பள்ளி கல்லூரிகளுக்கும் போதை பொருள் சென்று விட்டது.

தற்போது வழிபாட்டு தலங்களில் கூட போதைப்பொருள் கிடைக்கிறது. அரசு நினைத்தால் இதை ஒழிக்கலாம். ஆடு மாடுகள் உரிமைக்காக மதுரையில் ஜூலை 10ல் போராட்டம் நடத்த உள்ளேன் என்றார்.

Advertisement