தி.மு.க., அரசின் அலட்சியத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகும் அபாயம் ; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: அடிப்படை வசதிகளும் கற்பிக்க ஆசிரியர்களும் அற்ற வெற்று கட்டிடங்களால் யாருக்கு என்ன பயன்? என்று தமிழக அரசுக்கு பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


அவரது அறிக்கை; சென்னை தரமணியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கழிவறை, முறையான கட்டிடங்கள், மாணவர் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அங்கு படிக்கும் மாணவர்கள் 7 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள காணொளி, தி.மு.க., அரசின் நிர்வாகத் தோல்விக்கான மற்றுமொரு சான்று. தி.மு.க., அரசின் அவல ஆட்சியில் நமது சட்டம், ஒழுங்கின் வலிமையானத் தூண்களான வருங்கால வழக்கறிஞர்களும், நீதியரசர்களும் இப்படி நீதி கேட்டு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது.


“சட்டக் கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர்களை நியமிக்க முடியாவிடில் அரசு அவற்றை இழுத்து மூடி விடலாம்” என சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த போதும், தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் அரசு ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? ஒவ்வொரு ஆண்டும் இத்தனை புதிய கல்லூரிகளைத் திறக்கிறோம் என விளம்பரப்படுத்தினால் மட்டும் போதுமா? அடிப்படை வசதிகளும் கற்பிக்க ஆசிரியர்களும் அற்ற வெற்று கட்டிடங்களால் யாருக்கு என்ன பயன்?


எனவே, கல்விக் கூடங்களில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர முடியாத தி.மு.க., அரசின் அலட்சியத்தால் படிக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து, வெறும் விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு சற்று ஆட்சி நிர்வாகத்திலும் கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement