அணுசக்தி திட்டங்களை தொடர்ந்தால் மீண்டும் தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

7

தி ஹேக்: அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால்தான் ஈரான், இஸ்ரேல் இடையிலான போர் முடிவுக்கு வந்தது என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், அணுசக்தி திட்டங்களை தொடர்ந்தால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அவர்களால் நீண்ட காலம் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியாது. பல தசாப்தங்களுக்கு அவர்களின் அணுசக்தி திட்டங்கள் பின்னடைவை சந்தித்து உள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நல்லபடியாக சென்று கொண்டு உள்ளது.


ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதால் தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஹிரோஷிமா, நாகசாமி ஆகியவற்றை உதாரணமாக பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால், தற்போதும் அமெரிக்கா நடத்திய தாக்குதலால் தான் போர் முடிவுக்கு வந்தது.


பாலஸ்தீனத்தின் காசாவில் வளர்ச்சி காணப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக மேற்கு ஆசியாவில் நேர்மறையான தாக்கம் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் அவர், ஈரான் மீண்டும் அணுசக்தி திட்டங்களை தொடர்ந்தால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் என்றார்.


முன்னதாக, அமெரிக்காவின் தாக்குதலால், ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று வெளியான தகவலை மறுத்த அதிபர் டிரம்ப், அது பொய்ச் செய்தி. அணுசக்தி கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement