பிரதமர் மோடியை புகழ்ந்த விவகாரம்... கார்கேவின் விமர்சனத்திற்கு சசிதருர் மறைமுக பதிலடி

6

புதுடில்லி: பிரதமர் மோடி குறித்து புகழ்ந்து பேசியதை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அக்கட்சியின் எம்.பி., சசி தரூர் மறைமுகமாக பதில் அளித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


காங்., மூத்த தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூர் சமீபகாலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டி பேசி வருகிறார். இது, காங்கிரசார் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், சசி தரூர் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை.


சமீபத்தில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி வெளிநாடுகளில் எடுத்துரைத்து விட்டு நாடு திரும்பிய சசி தரூர், பிரதமர் மோடியை பாராட்டினார். அவர் பேசியதாவது;பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவை உலக அரங்கில் நம் நாட்டின் முக்கிய சொத்தாக திகழ்கிறது; அதற்கு நாம் அனைவரும் கூடுதல் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். சர்வதேச நாடுகளுடன் போட்டியிட தொழில்நுட்பம், வர்த்தகம், பாரம்பரியம் ஆகிய மூன்றிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும், இவ்வாறு கூறினார். இது, காங்., தலைமையை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.



@quote@இந்த நிலையில், நமக்கு நாடு தான் முதலில் முக்கியம், ஆனால், சில பேருக்கு பிரதமர் மோடி தான் முக்கியம் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூரை விமர்சித்துள்ளார். quote


இது குறித்து அவர் கூறியதாவது; சசி தரூரின் பேச்சு மிகவும் அற்புதமானது. அதனால் தான் அவர் இன்னமும் காங்கிரஸ் பணிக் குழுவில் இடம்பெற்றுள்ளார். நாட்டுக்காக ஒன்றாக நிற்போம் என்று கூறினோம். நமக்கு நாடு தான் முக்கியம். ஆனால், சிலருக்கு பிரதமர் மோடி முக்கியமாக தெரிகிறார். நாம் என்ன செய்ய முடியும்?, எனக் கூறினார்.



@block_Y@மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த பேச்சுக்கு சசிதரூர் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், "பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்கக் கூடாது. சிறகுகள் உங்களுடையது. வானம் யாருக்கும் சொந்தம் கிடையாது," என்று பகிர்ந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.block_Y

Advertisement