காண்டூர் கால்வாயில் விழுந்து ஆண் யானை பலி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, காண்டூர் கால்வாயில் விழுந்து ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாய் அமைந்துள்ளது. இங்கு, நல்லாறு ஷட்டர் பகுதியில், வன விலங்குகள் நீர் குடிக்கும் வகையில் அமைந்துள்ள சரிவு பகுதியில், வனப்பகுதியிலிருந்து வந்த, 15 வயதுடைய ஆண் யானை, குடிநீருக்காக வந்துள்ளது.

ஆழமாகவும், அதிவேகமாக நீரோட்டம் உள்ள இக்கால்வாயில் தவறி விழுந்து, நீரில் அடித்து வந்த யானையை பார்த்த விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் சென்று பார்த்த போது, உயிரிழந்த நிலையில், 3 கி.மீ., துாரம் வரை மிதந்து வந்த யானையை, திருமூர்த்தி அணைப்பகுதியில் கயிறு கட்டி, வனத்துறையினர் இழுத்தனர்.

வனப்பகுதியில், ஆண் யானைகள் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், நீளமான தந்தங்களுடன் கூடிய, 15 வயதே ஆன யானை பலியான சம்பவம், வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த யானையை மீட்டு, இறப்புக்காண காரணம் மற்றும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement