அணுசக்தி நிலையங்கள் பலத்த சேதம் அடைந்தது உண்மை: உறுதி செய்தது ஈரான்

1


டெஹ்ரான்: அமெரிக்காவின் தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.


ஈரான் அணுஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலடி கொடுத்தது. இதனால், இரண்டு நாடுகளுக்கு இடையே 13 நாட்களுக்கு மேல் போர் நடந்து வந்தது.


இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா, ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் பலத்த சேதம் அடைந்தது எனவும், அந்நாட்டால் பல ஆண்டுகளுக்கு அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என டிரம்ப் கூறினார். இதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையும் அறிவித்தார்.



இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளால் எந்த சேதம் ஏற்படவில்லை என அமெரிக்க உளவுத்துறையினர் கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை திட்டவட்டமாக மறுத்த டிரம்ப் அது போலி செய்தி என்றார். மேலும், அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டால், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரித்து இருந்தார்.



இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளது உண்மை என ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement