போரின் போது துணை நின்ற இந்தியா; நன்றி சொன்ன ஈரான்

5


புதுடில்லி:இஸ்ரேலுக்கு எதிரான போரின் போது துணை நின்ற இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஈரான் அறிவித்துள்ளது.


கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடும் போர் நிலவி வந்தது. குறிப்பாக, ஈரானை அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம் என்று கூறி, இஸ்ரேலும், அமெரிக்காவும் மாறி மாறி, அணுஆயுத நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதனால் போர் இன்னும் மோசமடையும் என்ற அச்சம் ஏற்பட்டது.


இதனிடையே, ஈரான் அணு சக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல்கள் குறித்த தன் கவலைகளை பிரதமர் மோடி ஈரான் அதிபரிடம் தெரிவித்தார். மத்திய கிழக்கில் பதட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் மோதல்களை தீர்க்க, ராஜதந்திர அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார்.


இந்த சூழலில், இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன. அடுத்த வாரம் ஈரானுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்துள்ளார்.


இந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான போரின் போது, ஆதரவு கொடுத்த இந்தியாவுக்கு ஈரான் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து டில்லியில் உள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "சியோனிச ஆட்சி மற்றும் அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈரான் மக்கள் வெற்றி பெற்ற இந்த நேரத்தில், டில்லியில் உள்ள ஈரான் தூதரகம், இந்திய மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. கடந்த நாட்களில் ஈரான் மக்களுக்கு உறுதுணையாக நின்றதற்கு நன்றி," எனக் குறிப்பிட்டுள்ளது.

Advertisement