ஹிமாச்சலில் மேகவெடிப்பு; 2 பேர் பலி, 10 பேர் மாயம்

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.


கங்ரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.

இது குறித்து உடனடியாக மீட்பு குழுவினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாயமானவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் மின்திட்டம் தொடர்பான பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்ததாகவும், அப்போது, ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இதனிடையே, ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மோசமான வானிலை காரணமாக வரும் ஜீன் 27ம் தேதி வரை சிம்லாவில் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement