காற்றிலும் கூட ஊழல் செய்தவர் * ஆ.ராஜாவுக்கு பா.ஜ., கண்டனம்

சென்னை:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்த, தி.மு.க., --- எம்.பி., ஆ.ராஜாவுக்கு, தமிழக பா.ஜ.,வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை எழும்பூரில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராஜா, மத்திய அமைச்சர் அமித் ஷாவை, முட்டாள் எனக் கூறியதோடு, மிகவும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அதற்கு பதிலடி அளித்து, பா.ஜ., தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்:

* மத்திய அமைச்சர் முருகன்:

மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியை வீழ்த்தி, ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கி காட்டுவோம்' என, சூளுரைத்தது முதல், தி.மு.க.,வினர் பித்து பிடித்து அலைகின்றனர். தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா, அமித் ஷாவை தகாத முறையில் பேசி இருக்கிறார்.

குடும்ப அரசியல் நடத்தி ஊழலின் உறைவிடமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும், அவரது தொண்டர்களுக்கும், அமித் ஷா எழுப்பிய கேள்விக்கு பதில் கூற தைரியமோ, திராணியோ இல்லை.

கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவர்கள், பா.ஜ., தலைவர்களை இழித்தும், பழித்தும் பேசி வன்மத்தை கக்குகின்றனர்.

* தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்:

கண்களுக்கு தெரியாத காற்றில் கூட, ஊழல் செய்து அம்பலப்பட்டு, சிறை சென்று வந்த தி.மு.க., - எம்.பி., ராஜா, நாட்டிற்காக உழைத்து கொண்டிருக்கும் அமித் ஷாவை, தரக்குறைவாக விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது. மக்களின் பிரதிநிதியாக பார்லிமென்டில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை. தி.மு.க., ஆபாச பேச்சாளர்கள் போல, கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது.

தமிழக அவல நிலை குறித்து எதுவும் தெரியாமல், 'நான் தான் நம்பர் 1 முதல்வர்' என்ற மாய உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கும் ஒருவரை தலைவராக கொண்ட மூடர் கூட்டத்திற்கு, அனைவரும் முட்டாள்களாக தான் தெரிவர்.

* முன்னாள் கவர்னர் தமிழிசை:

தமிழகத்தில் பா.ஜ., பலம் பெறும் எனற அமித் ஷாவின் வார்த்தைகள், எவ்வளவு பதற்றம் அடைய செய்திருக்கிறது என்பது, ராஜா பேச்சில் வெளிப்படுகிறது. டில்லி, மஹாராஷ்டிராவில் வெற்றி பெற்றதுபோல், நிச்சயமாக தமிழகத்திலும் வெற்றி பெற போகிறோம். தி.மு.க.,வினரிடம் நாகரிகத்தை எதிர்பார்க்கக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement