விளைபொருள் மறைமுக ஏலம்; விவசாயிகளுக்கு லாபம்

திருப்பூர்; ஊத்துக்குளி வட்டம், கருமஞ்சிறை கிராமத்தில், வேளாண்மை துறை சார்பில், ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. தேங்காய், கொப்பரை மற்றும் நிலக்கடலை ஆகியவை ஏலத்தின் வாயிலாக விற்கப்படுகின்றன.

கடந்த மார்ச் இறுதிவரை, மனித ஆற்றல் வாயிலாக ஏலம் நடத்தப்பட்டு வந்த நிலையில், ஏப்., முதல் தேதியில் இருந்து இ-நாம் வாயிலாக மறைமுக ஏலம் நடத்தப்படுகிறது.

'அட்மா' திட்டத்தின் கீழ், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் செயல்பாடுகள் மற்றும் இ-நாம் எனப்படும், எலக்ட்ரானிக் ஏல முறை குறித்து, மாவட்ட அளவில், விவசாயிகளுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது. ஊத்துக்குளி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மோகனசுந்தரம், தலைமை வகித்தார்.

இப்பயிற்சியில், திருப்பூர் விற்பனைக்குழு, குன்னத்துார் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் கூறுகையில்,''இ-நாம் ஏல முறை என்பது, முழுக்க முழுக்க மனித ஆற்றல் வாயிலாக நடத்தப்படும், மறைமுக ஏல முறை.

இதன் வாயிலாக விற்கப்படும் விளைப் பொருட்களுக்கான விலை, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். மறைமுக ஏலம் என்பதால், விளைபொருட்களுக்கு விலை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு. எனவே, இதுகுறித்த விழிப்புணர்வை விவசாயிகள் பெற வேண்டும்,'' என்றார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் மனோகரன் நன்றி கூறினார்.

Advertisement