திருப்பதி லட்டு தயாரிக்க 2.50 லட்சம் கிலோ நந்தினி நெய்

1


பெங்களூரு: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, முதற்கட்டமாக 2.50 லட்சம் கிலோ நெய்யை, பலத்த பாதுகாப்புடன் கே.எம்.எப்., எனும் கர்நாடகா பால் கூட்டமைப்பு அனுப்பி வைத்தது.

ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, உலக பிரசித்தி பெற்றது. இந்த லட்டு தயாரிக்க, கர்நாடக அரசின் கே.எம்.எப்., தயாரிப்பான நந்தினி நெய் வழங்கப்பட்டு வந்தது.



கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன், இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, தனியார் நிறுவனத்துக்கு, அப்போதைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு ஒப்பந்தம் வழங்கியது. அந்நிறுவனம் வழங்கிய நெய் தொடர்பாக புகார்கள் எழுந்தன.


நெய்யை ஆய்வுக்கு அனுப்பியபோது, அதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்துவது தெரியவந்தது.


இதையடுத்து, அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கர்நாடகாவின் நந்தினி நெய் வினியோகிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு 10 லட்சம் கிலோ நெய் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.


இதன்படி, முதற்கட்டமாக மாண்டியா பால் கூட்டுறவு சங்கத்தில் இருந்து, 2.50 லட்சம் கிலோ நெய், பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


மீதமுள்ள நெய், மாநிலத்தின் மற்ற மாவட்ட பால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக அனுப்பப்பட உள்ளது.


கே.எம்.எப்., அதிகாரிகள் கூறுகையில், 'கோவில் பூஜைகள், பிரசாதம் தயாரிக்க, ஆன்மிக விழாக்களில் நந்தினி நெய் பயன்படுத்தப்படுகிறது.


'திருமலை திருப்பதி கோவிலின் தேவைகளை பூர்த்தி செய்ய, நாங்கள் தயாராக இருக்கிறோம். துாய்மை, தரம், நம்பகத்தன்மையுடன் நந்தினி நெய் வழங்குவோம்' என்றனர்.

Advertisement