அரசு பள்ளிகளில் திறனாய்வு தேர்வு விளையாட்டு போட்டிகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் உலக திறனாய்வு தேர்வு விளையாட்டு போட்டிகள் தீவிரம் அடைந்துள்ளன.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் விளையாட்டு திறன்களை கண்டறியும் பொருட்டு உலகத் திறனாய்வு தேர்வு விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.மாணவர்களின் உயரம், உடல் எடையைத் தாண்டி வேகம், நிலைப்புத்தன்மை, வலிமை, நீண்டநேரம் சக்தியை செலவிடுதல், உடலியக்க மாறுபாடு ஆகியவற்றின் கீழ், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், திரும்பி திரும்பி ஓடுதல் 600, 800 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன.

தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 6,7,8ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ மாணவியருக்கும் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களின் விளையாட்டு திறன் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை 'எமிஸ்' இணையளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த நிலையில், எலவனாசூர்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மெய்யப்பன், உடற்கல்வி இயக்குனர் அலாவுதீன் பாஷா, உடற்கல்வி இயக்குனர் சாமிதுரை ஆகியோர் போட்டிகளை நேற்று நடத்தினர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இப்போட்டிகள் நடந்து வருகிறது.

மேலும் இதில் சிறப்பாக விளையாடும் மாணவர்களை கண்டறிவதின் மூலம் குறுமைய, மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் தயார்படுத்துவதற்கும் உறுதுணையாக அமையும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement