பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் மானியத்துக்கு ரூ.1,111 கோடி ஒதுக்கீடு

சென்னை:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்திற்கு மானியம் வழங்க, 1,111 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

நாடு முழுதும் உள்ள விவசாயிகள், சாகுபடி செய்யும்போது இயற்கை சீற்றங்கள், வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.

பயிர் காப்பீடு செய்வதன் வாயிலாக நஷ்டத்தில் இருந்து, விவசாயிகள் தப்பிக்க முடியும். இதற்காக, மத்திய அரசு, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த, இந்திய வேளாண் காப்பீட்டு கழகம், பஜாஜ் அலையன்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களை, 14 தொகுப்புகளாக பிரித்து, இந்நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீடு திட்டத்திற்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்க, தமிழக அரசின் பங்களிப்பாக, 1,111 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு மட்டும், 1,068 கோடி ரூபாயும், தோட்டக்கலைப் பயிர்களுக்கு, 43 கோடி ரூபாயும் செலவிடப்படவுள்ளது.

இதற்கான அரசாணையை, வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி பிறப்பித்துள்ளார். விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு இதே அளவு நிதியை, மத்திய அரசும் ஒதுக்க உள்ளது.

தற்போது, டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி காலம் துவங்கியுள்ளது. நெல் மட்டுமின்றி பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள் சாகுபடியும் நடந்து வருகிறது.

இப்பயிர்களுக்கு காப்பீடு செய்யும் பணியை, காப்பீட்டு நிறுவனங்கள் நேற்று முதல் துவங்கியுள்ளன. பயிர் காப்பீட்டை கண்காணிப்பதற்கு மத்திய அரசு, தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தை உருவாக்கியுள்ளது.

இதில், தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்யப்படும் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். பதிவுகளுக்கு ஏற்ப விவசாயிகளுக்கான மானிய தொகையை படிப்படியாக, மத்திய அரசு விடுவிக்கவுள்ளது.

Advertisement