கடலோர பாதுகாப்பு ஒத்திகை தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு

கடலுார் : கடலுார் மாவட்ட கடலோர பாதுகாப்பு படை சார்பில் , கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை கூட்டு பயிற்சி நேற்று நடந்தது.

ரெட் போர்ஸ்' குழுவைச் சேர்ந்த போலீசார் சாதாரண உடையில் தீவிரவாதிகள் போல் கடல் வழியாக ஊடுருவ முயற்சி செய்வார்கள். இவர்களை ஊருக்குள் நுழையாமல் தடுக்க சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடலுாரில் நேற்று சாகர் கவாஜ் ஒத்திகை நடத்தப்பட்டது.

காலை 8.15மணிக்கு, கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையில் போலீசார் தேவனாம்பட்டினம் அருகே கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி இரண்டு படகுகளில் வந்த ஐந்து நபர்களை சுற்றி வளைத்தனர்.

அவர்களிடம் இருந்து போலி வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர்கள் தீவிரவாதிகள் போல் சாதாரண உடையில் வந்த போலீசார் என, தெரிந்தது. கடலுாரில் நடந்த சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகையின் போது தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்த சம்பவத்தால் போலீசார் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement