'உதவியாளர் பணி தேர்வை ரத்து செய்ய வேண்டும்' தேர்வை ரத்து செய்ய அ.தி.மு.க., வலியுறுத்தல்

புதுச்சேரி : உதவியாளர் பணிக்கு இ.டபுள்யூ.எஸ்., பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 25 பேரில் 23 பேர் ஏனாமில் இருந்து தேர்வானது எப்படி என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கூறியதாவது:

அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அமைச்சக உதவியாளர் பணிக்கு தேர்வு மூலம் 256 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் சட்டத்தின்படி, முற்படுத்தப்பட்ட பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டின்படி 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், ஏனாம் பிராந்தியத்தில் இருந்து 23 பேரும், மற்ற மூன்று பிராந்தியங்களில் இருந்து 2 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.ஒவ்வொரு பணி நியமனத்திலும், இ.டபுள்யூ.எஸ்., பிரிவில் முழுக்க, முழுக்க ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பிற பிராந்தியங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களில் உரிய சான்றிதழ் வழங்குவதில்லை. ஏனாமில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு இச்சான்றிதழ் தடையின்றி வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் இட ஒதுக்கீடு பிரிவில் பயன்பெறாத அய்யர், ஐயங்கார், ரெட்டியார் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் இச்சட்டத்தில் இடம் உண்டு. எனவே இத்தேர்வை முழுமையாகவோ அல்லது இ.டபுள்யூ.எஸ்., பிரிவு தேர்வு முடிவை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளாக புதுச்சேரியில் பிறந்து, புதுச்சேரியில் படித்து அரசு பணிக்கான தேர்வில் எந்த இட ஒதுக்கீட்டிலும் கொண்டு வரப்படாமலும், உரிமை மறுக்கப்படும் அட்டவணை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், முற்படுத்தப்பட்ட இனத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினரில் ஒதுக்கீடு வழங்கினால் சமநீதி காப்பாற்றப்படும். இதனை முதல்வரும், கவர்னரும் கருத்தில் கொண்டு நியாயமான தீர்வை வழங்க வேண்டும்' என்றார்.

Advertisement