வருவாய்த்துறை சங்கங்களின்  கூட்டமைப்பு தர்ணா போராட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்டத்தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் காசிநாததுரை, வி.ஏ.ஓ., சங்கத் தலைவர் ஜெகநாதபூபதி, மாநில ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக டி-பிளாக் பட்டணம்காத்தான் ஊராட்சி அலுவலகம் அருகே இருந்து வருவாய்துறையை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டப்படி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

வருவாய்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை பணிநியமன உச்சவரம்பை 25 சதவீதமாக அதிகரித்தல், ஜூலை 1ம் நாளை வருவாய்துறை தினமாக அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், சர்வேயர்கள், வி.ஏ.ஓ.,க்கள், தலையாரிகள் என 1000த்திற்கும் மேற்பட்டோர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றதால் கலெக்டர், தாலுகா உள்ளிட்ட அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டது.

Advertisement